வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: பாலச்சந்திரன்

சென்னை: அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், தமிழகப் பகுதிகளைக் கடந்து சென்ற கஜா புயலானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் மேற்கு திசையில் நகர்ந்து கேரளப் பகுதிகளைத் தாண்டி தற்பொழுது மீண்டும் அரபிக் கடலில் லட்சத் தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மீண்டும் புயலாக வலுப்பெற்று மேற்கு திசையில் நகர்ந்து செல்லக் கூடும். கஜா புயலால் தமிழகத்துக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை.
தற்போதைய நிலவரப்படி, தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகக் கூடும். இது நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடலில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக் கூடும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் 19, 20, 21ம் தேதிகளில் தமிழகம், புதுவையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 17 செ.மீ. மழையும், கொடைக்கானலில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, தென்கிழக்கு அரபிக் கடலில் 18, 19ம் தேதியும், தென்மேற்கு அரபிக் கடலுக்கு 19, 20 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கக் கடலை பொருத்தவரை தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் 18ம் தேதியும், தென் மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் 19, 20 தேதிகளில் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.