11 மாவட்டங்களில் இன்று மழை

காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோரத்துக்கு தொலைவில் உள்ள மாவட்டங்களில், மையம் கொண்டுள்ளதால், 11 மாவட்டங்களுக்கு, மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதன் தொலைவில் உள்ள மாவட்டங்களில் மையம் கொண்டிருந்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் காலை துவங்கிய மழை, நேற்று அதிகாலை வரை பெய்தது.


நேற்று, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை. பகலிலும் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், லேசாக மழை துாறியபடி இருந்தது; சில நேரங்களில் லேசான வெயில் எட்டிப் பார்த்தது.இந்நிலையில், நாளை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து, வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர், பாலசந்திரன் அளித்த பேட்டி:தென் மேற்கு வங்கக்கடலில், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களில் நிலை கொண்டிருந்த, வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக நிலப் பகுதிக்குள் மையம் கொண்டுள்ளது. இது, வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கும். இன்று, வடக்கு மாவட்டங்களில் பரவலாகவும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும்.புதுச்சேரி, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், கன மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில், இடைவெளி விட்டு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.