சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் TRB குளறுபடி?

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யின் குளறுபடியை தொடர்ந்து, தமிழ் வழி சான்றிதழ் குறித்து, அரசுத் தேர்வு துறை விளக்க அறிக்கை வெளியிட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி பாடங்களில் காலியாக உள்ள, 1,325 ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2017 செப்., 23ல் தேர்வு நடத்தப்பட்டது. 


தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆகஸ்ட், 13ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பணி நியமன பட்டியலை, அக்., 12ல், டி.ஆர்.பி., வெளியிட்டது.ஆனால், பல தேர்வர்கள், 'ஹையர் கிரேடு' என்ற, மேல்நிலை தொழில்நுட்ப தேர்வு தொடர்பான, தமிழ் வழி சான்றிதழை வழங்காததால், அதிக மதிப்பெண் பெற்றும், அவர்களின் பெயர்கள், பணி நியமன பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால், டி.ஆர்.பி., அலுவலகம் முன், தேர்வர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது:தொழில்நுட்ப தேர்வை நடத்தும் அரசுத் தேர்வு துறை, தமிழ் வழி சான்றிதழை யாருக்கும் வழங்கவில்லை. ஆனால், சிலர் தேர்வுக்கு தொடர்பில்லாத தனியார் நிறுவனங்களில், தமிழ் வழி சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்ததை, டி.ஆர்.பி., ஏற்றுள்ளது. இது சட்ட விரோதம்; இதில் முறைகேடுகள் நடந்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், தேர்வு வாரிய அதிகாரிகளின் விதிமீறலை, வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில், அரசுத் தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:அரசு தேர்வு துறையால், தனித்தேர்வர்களுக்கு மட்டும், கீழ் நிலையான, 'லோயர் கிரேடு' மற்றும் மேல் நிலையான, 'ஹையர் கிரேடு' என்ற, அரசு தொழில் நுட்ப தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.ஒரே வினாத்தாள்தனி தேர்வர்கள் எந்த மொழியில் படித்தனர் என்ற விபரம் தெரியாததால், தேர்வர்களின் நலன் கருதி, தமிழ் மற்றும் ஆங்கில வழியில், ஒரே வினாத்தாளாக வழங்கப்படுகிறது.தொழில்நுட்ப தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை, அரசுத் தேர்வு துறை நடத்துவதில்லை. எனவே, தொழில்நுட்ப தேர்வுகளுக்கு, தமிழ் அல்லது ஆங்கில வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து, எந்த தேர்வரும், அரசுத் தேர்வு துறை அலுவலகத்தை அணுக வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது