பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு செய்ய 'Tn Attendance' என்ற பிரத்யேக 'ஆப்





பள்ளி துவங்கிய முதல் பாட வேளையில், அனைத்து வகுப்பறைகளில் இருந்தும்
கேட்பது, 'உள்ளேன் ஐயா...' என்ற ரீங்காரம் தான்.

சிவப்பு மையால், வருகைப்பதிவேட்டில் எடுக்கப்பட்ட, வருகைப்பதிவு நடைமுறையை, இனி ஸ்மார்ட் போன் பார்த்துக்கொள்ளும்.பல அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்து காண்பிக்கும் நோக்கத்துடன், இல்லாத மாணவர்களை இருப்பதாக கணக்கு காண்பித்து, நலத்திட்ட நிதியை அமுக்கும் நிலை உள்ளது. போலியாக காண்பிக்கப்படும் இந்த கணக்கால், விதிமுறைகளின்படி பள்ளியை மூடுவதும் தவிர்க்கப்படுகிறது.

இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி நடக்காது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் விதமாக, 'Tn Attendance' என்ற பிரத்யேக 'ஆப்' வந்து விட்டது. இதை ஆசிரியர்கள் பதிவிறக்கி, அந்தந்த பள்ளிக்கான பயனர் எண், பாஸ்வேர்டு உள்ளீடு செய்தால், மாணவர்களின் விபரங்கள்திரையில் தோன்றும்.தினசரி காலை, 9:30 மணியளவிலும், மதியம் உணவு இடைவேளைக்கு பின்பும், மாணவர்களின் வருகையை இதில், உள்ளீடு செய்ய வேண்டும்.

விடுப்பு எடுத்த மாணவர்களின், பெயருக்கு அருகில் மட்டும், 'கிளிக்' செய்தால், 'ஆப்சென்ட்' ஆகிவிடும். ஒருமுறை தகவல்களை உள்ளீடு செய்த பின், வருகைப்புரிந்தவர்கள், பள்ளிக்கு வராதோர் குறித்த தகவல்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் என, தனித்தனியே திரையில் தோன்றும். இதை சமர்ப்பித்தவுடன், இயக்குனரகத்தில் உள்ள தொழில்நுட்ப குழுவினர் பார்வையிடலாம்.

கோவை பள்ளிகளில், பரீட்சார்த்த முறையில், இம்மாதம் இறுதிவரை, ஸ்மார்ட் போனில் அட்டெண்டென்ஸ் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறை வாயிலாக,வருகைப்பதிவு எடுப்பதால், பள்ளிக்கு வருவோர் குறித்ததகவல்களை, எந்நேரத்திலும் அதிகாரிகளால் இருந்த இடத்தில் இருந்தபடி பார்வையிட முடியும்.

ஆசிரியர்களுக்கும் உண்டு!

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் அருளானந்தம் கூறுகையில்,''ஸ்மார்ட் போன் பயன்படுத்தி, வருகைப்பதிவு எடுக்கும் முறையை, ஆசிரியர்கள் வரவேற்கின்றனர். இதே நடைமுறை, ஆசிரியர்களுக்கும் உள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் குறித்த தகவல்களை, சி.இ.ஓ., முதல் அனைத்துஅதிகாரிகளும் அறிந்து, ஆய்வு நடத்த முடியும்,'' என்றார்.