CBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையில், மாநில அரசுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, சி.பி.எஸ்.இ., கடிதம் அனுப்பியுள்ளது.செயல்வழி கற்றல் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு திறனை சோதிக்கும் பாடங்கள் உள்ளதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன. 


ஆவணங்கள்நாடு முழுவதும், 20 ஆயிரம் பள்ளிகளும், தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற விரும்பும் பள்ளிகள், மாநில அரசின் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப, முதலில், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். பின், அங்கீகார சான்றுகள், அரசு துறையின் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கல்வி நிறுவன விபரங்களை, சி.பி.எஸ்.இ.,க்கு, பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்.அவற்றை சரிபார்த்து, சி.பி.எஸ்.இ., ஒப்புதல் அளிக்க, இரண்டு, மூன்று ஆண்டுகள் வரையாகும். 


இதனால், பல பள்ளிகள், மாநில அரசுக்கு தெரியாமல், சி.பி.எஸ்.இ.,க்கு சென்று, தவறான ஆவணங்களை சமர்பித்தும், செல்வாக்கை பயன்படுத்தியும், பாட திட்ட இணைப்பு பெற்றுள்ளன.இது குறித்து, சி.பி.எஸ்.இ., ஆய்வு நடத்தி, இந்த ஆண்டு மட்டும், நாடு முழுவதும், 99 பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்து உள்ளது. எனவே, முறைகேடுகள் மற்றும் கால தாமதத்தை தவிர்க்க, மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.

இதன்படி, வரும் காலங்களில், மாநில அரசின் தடையில்லா சான்று கேட்கும் பள்ளிகள், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களை, மாநில பள்ளி கல்வி துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒப்புதல்பாடத்திட்ட இணைப்புக்கான விண்ணப்பத்தையும், பள்ளி கல்வி அதிகாரிகளிடமே வழங்க வேண்டும். அவற்றை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அசல் ஆவணங்களுடன் சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவர்.ஒப்புதல் ஆணை கிடைத்த பின், சி.பி.எஸ்.இ., சார்பில், இணைப்பு கடிதம் மட்டும் வழங்கப்படும். இந்த முறையை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுகளுக்கு, சி.பி.எஸ்.இ., - கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கருத்துக்களும் கிடைத்த பின், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது.