'டெங்கு' காய்ச்சல் தடுப்பு பள்ளிகளுக்கு எச்சரிக்கை

அரசு பள்ளிகளில், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களுக்கான, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


வட கிழக்கு பருவமழை துவங்குவதையொட்டி, முன் எச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில், அரசு துறைகள் ஈடுபட்டுள்ளன. தமிழக, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


பருவமழை துவங்க உள்ளதால், மழைக்கால முன் எச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மழை நீர் தேங்குவதாலும், சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதாலும், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மழை காலங்களில் பள்ளி வளாகத்தில், மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.மழையால், பழைய கட்டடங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாமல், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குடிநீர், கழிவுநீர் தொட்டிகளை மூடியும், கிணறுகள் திறந்தநிலையில் இல்லாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.மழை கால நோய் தடுப்பு குறித்து, பிரார்த்தனை கூட்டத்தில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி மற்றும் சுகாதார துறைகள் வழியாக, நோய் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாத அளவுக்கு, பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது