'டிஸ்லெக்சியா' மாணவர்களை, கட்டாயப்படுத்தி, பள்ளியில் இருந்து வெளியேற்ற தடை

'டிஸ்லெக்சியா என்ற, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை, கட்டாயப்படுத்தி, பள்ளியில் இருந்து வெளியேற்ற கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 'டிஸ்லெக்சியா' மாணவர்கள் விஷயத்தில், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 


இந்த திட்டப்படி, முதல் கட்டமாக, சென்னை மாவட்டத்தில், 1,088 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில், சிறப்பு பயிற்சிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான நிகழ்ச்சி, ராயப்பேட்டை, வெஸ்லி மேல்நிலை பள்ளியில் நடந்தது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர், அறிவொளி பேசியதாவது: 

மாணவர்களின் அடிப்படை திறனை புரிந்து, அதை வெளிக்கொணர வேண்டும். கற்றல் குறைபாடு இருந்தால், அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், அதற்கான பயிற்சி தருவது முக்கியம். தனியார் பள்ளிகளில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கணக்கெடுத்ததில், ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம், 20 சதவீதம் பேர் படிக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, ஆசிரியர்களோ, சம்பந்தப்பட்ட பள்ளிகளோ, பயிற்சி தருவதில்லை.மாறாக, மதிப்பெண் குறைவாக வாங்கினால், அவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இனி, எந்த பள்ளியும், கற்றல் குறைபாடுக்காக, மாணவர்களை வெளியேற்ற கூடாது. அவர்களுக்கு, அரசின் சார்பில், இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான ஆசிரியர்கள், கட்டாயம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.