மூன்றாம் பருவ புத்தகம் அச்சடிப்பு துவக்கம்

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளி கல்வியின் சமச்சீர் பாட திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் வசூலித்து புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.நடப்பு கல்வி ஆண்டில், அக்., 3 முதல், இரண்டாம் பருவம் துவங்கியுள்ளது. டிச., 24ல், இரண்டாம் பருவ பாடங்கள் முடிய உள்ளன. ஜன., 2 முதல், மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படும்.

 இதற்காக, டிசம்பரிலேயே, மூன்றாம் பருவ புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்ப, தமிழ்நாடு பாடநுால் கழகம் முடிவு செய்துள்ளது.இதையொட்டி, பழைய மற்றும் புதிய பாடத்திட்ட வகுப்புகளுக்கு, புத்தகங்களை அச்சிடும் பணிகளும் துவங்கியுள்ளன. அதேபோல, பிளஸ் 1ல், இதுவரை நிலுவையில் இருந்த, சிறுபான்மை மொழி பாடங்களுக்கும், புத்தக அச்சடிப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ள தாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.