கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்

'அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு,
ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அரசு பள்ளிகளில், 1994ல், கணினி அறிவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில், கணினி அறிவியல் சார்ந்த, 'டிப்ளமா' படித்தவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், பி.எஸ்.சி., கணினி அறிவியல் பாடம் அறிமுகமானதால், பி.எஸ்.சி., - பி.எட்., முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப் பட்டனர்.இந்த அடிப்படையில், 765 ஆசிரியர்கள், தற்போது பணியாற்றுகின்றனர். ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்த, முதுநிலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், கணினி ஆசிரியர் நியமனத்தில், தமிழக அரசு, புதிய முடிவு எடுத்துள்ளது.அதன்படி, தற்போது, 809 காலியிடங்களை நிரப்ப, முதுநிலை படித்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். அவர்கள், மேல்நிலை பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் பரசுராமன் தலைமையில், நேற்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.ஆனால், அதிகாரிகள் கூறியதாவது:பட்டப்படிப்பு முடிக்காதவர்கள், பல ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்களாக பணியாற்றினர். பட்டப்படிப்பு அறிமுகமானதும், புதிதாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது, முதுநிலை படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே பட்டப்படிப்பு கல்வி தகுதி யுடன் பணி பெற்றவர்களுக்கு, முதுநிலை அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.