சத்துணவு ஊழியர்கள், 'ஸ்டிரைக்' : மாணவர்களுக்கு உணவு கிடைக்குமா?

சத்துணவு ஊழியர்கள் இன்று முதல், கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், பள்ளிகளில், 43 ஆயிரம் மையங்களில், மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காலி பணியிடங்களை நிரப்புதல்; காலமுறை ஊதியம்; உணவு தயாரிப்பு செலவை உயர்த்துதல் உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு பணியாளர்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


பள்ளிகளில் சத்துணவு பணிகளை கவனித்த படி, அக்., 25 முதல், கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழக அரசு கண்டு கொள்ளாததால், இன்று முதல், கால வரையற்ற போராட்டமாக நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து, சத்துணவு ஊழியர் சங்க பொதுச் செயலர், நுார்ஜஹான் கூறியதாவது:சத்துணவு மையங்களை இழுத்து பூட்டி விட்டு, மாவட்ட தலைநகரில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சென்னையில், கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடக்கும். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.போராட்டம் காரணமாக, மாநிலத்தில் உள்ள, 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், உணவு சமைக்கும் பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மையங்களின் சாவியை பெற்று, சத்துணவு சமைத்து, மாணவர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.