உதவி பேராசிரியர் பணியில் 50 சத ஒதுக்கீடு 'செட், நெட்' ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ராமநாதபுரம்:கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் 50 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு 'செட், நெட்' ஆசிரியர்கள் சங்கம் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு 'செட், நெட்', பிஎச்.டி., ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
ராமநாதபுரத்தில் நடந்தது. மாநில தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ராமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் காளிதாஸ் வரவேற்றார்.
தீர்மானங்கள்
அறிவிப்பு வெளியாக உள்ள கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியிடத்தில் மாநிலத் தகுதித் தேர்வு (செட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்), பிஎச்.டி., தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அரசு உத்தரவுப்படி 50 சதவீதம் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அனைத்து பணியிடங்களையும் எழுத்து தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஆசிரியர்களின் பள்ளி பணி அனுபவத்திற்கும் உரிய மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட செயலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
மாநிலத் தலைவர் ஜவஹர் கூறுகையில், ''உதவி பேராசிரியர் தகுதியுடன் 2800 ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் உள்ளனர். 1997 வரை உதவிப் பேராசிரியர் தகுதியுடன் பள்ளிகளில் பணிபுரிந்தவர்கள் 50 சதவீத ஒதுக்கீட்டின்படி கல்லுாரிகளில் நியமிக்கப்பட்டனர். அதன்பின் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது,'' என்றார்.