' J.E.E.; ,'N.E.E.T'போன்ற நுழைவுத் தேர்வுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி

ஜே.இ.இ., நீட்,' போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, மத்திய அரசும் இலவச பயிற்சி தர உள்ளது.நீட் மற்றும் ஜே.இ.இ., போன்ற, நுழைவு தேர்வு களில் தேர்ச்சி பெற்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேருவது, மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. 


வரவேற்பு : சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், கேள்வித்தாள் அமையும் நிலையில், மாநில பாடத்திட்ட மாணவர்கள், இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற திணறுகின்றனர்.இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, தமிழக அரசு சார்பில், இலவச நீட் தேர்வு பயிற்சி துவக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு உள்ளது. 


இதைத்தொடர்ந்து, மத்திய அரசு சார்பிலும், நுழைவு தேர்வுக்கான இலவச பயிற்சி திட்டம் அமலுக்கு வர உள்ளது.இதற்காக, நாடு முழுவதும், நுழைவு தேர்வு பயிற்சி மையங்களை, தனியார் பள்ளிகளில் அமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. 

உதவித்தொகை : கணினி ஆய்வகம், ஸ்மார்ட் போர்டு, இணையதள தொடர்பு போன்ற வசதிகள் உடைய பள்ளிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்கலாம்.இந்தத் திட்டத்தில் சேரும் பள்ளிகளுக்கு, மாதம் தோறும், 23 ஆயிரம் ரூபாய் செலவு தொகையாக வழங்கப்படும். 


ஆனால், மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது.டில்லி மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, 'ஆன்லைனில்' பாடம் நடத்தப்படும். அதேபோல, அரசின் இலவச பயிற்சியை பெற, மாணவர்களும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், தேசிய தேர்வு முகமையின், https://www.nta.ac.in/ என்ற, இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.