CBSE பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைகிறது, மத்திய அமைச்சர் ஜாவடேகர் அறிவிப்பு

''அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு, 10 - 15 சதவீத பாடத் திட்டங்கள் குறைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்து உள்ளார்.


சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் பாடதிட்டத்தை பின்பற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பள்ளிகளில், 1 முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என, ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, பாடதிட்டத்தை மறு சீரமைப்பு செய்து, அதன் சுமையை, 10 - 15 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த மாற்றம், அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். அதற்கு அடுத்த கல்வியாண்டில், பாடத் திட்டம், மேலும் குறைக்கப்படும். இந்த மறுசீரமைப்பு பணிகளை, என்.சி.இ.ஆர்.டி., செய்து வருகிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.