கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம்

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவையும்,
பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனை பாதுகாக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் 'மான்ட்ரியல் ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதனை குறிக்கும் விதமாக 1987ல் இருந்து செப்., 16ம் தேதி உலக ஓசோன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'குளிர்ச்சியை தக்க வைத்து முன்னேறுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

என்ன பயன் : ஓசோன் என்பது வாயுக்களால் ஆன படலம். பூமியிலிருந்து 20 - 60 கி.மீ., உயரம் வரை பரவி உள்ளது. 20லிருந்து 25 கி.மீ., வரை அடர்த்தியாக பரவியுள்ளது. சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இவை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய பணி. மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்கிறது. ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி, ஏர் கூலர்கள், மற்றும் புகையிலை தொழிற்சாலைகள், தீயணைப்பு கருவி ஆகியவற்றில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். இது நுாறு ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும். சூரிய கதிர்கள் இவ்வாயுவின் மீது படும்போது வேதியியல் மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து, ஓசோன் துகளை தாக்குகிறது. ஓசோனிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு துகளாக மாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம் பாதிக்கிறது. இதனால் இந்த குளோரோ புளூரோ கார்பன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஓசோனை பாதுகாக்கலாம்.
என்ன பாதிப்பு : ஓசோன் வாயுக்கள் அளவு குறைந்தால், பூமியின் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும்.
ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.