கல்வி உதவி தொகைக்கு வருமான வரம்பு உயர்வு

உயர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு, உயர்த்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமா முடித்து, உயர்
கல்வி செல்லும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்லுாரிகளில், இளநிலை பட்ட படிப்பில் சேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும், 82 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, கல்வி உதவித்தொகை, மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவர்களின், குடும்ப ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என, ஏற்கனவே நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது தற்போது, வருமான உச்சவரம்பை அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இனி, ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய் வரை உள்ள, குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், மத்திய அரசின் உதவித்தொகையை பெற முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், தங்களின் மேல்நிலை கல்வி படிப்பில், குறைந்தபட்சம், 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் புதிய அறிவிப்பால், இந்த ஆண்டு, அதிக மாணவர்கள், உதவித்தொகை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, உயர் கல்வி துறையினர் தெரிவித்தனர்.