இணைய ஆபத்தை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவும் புதிய, 'ஆப்'

'புளுவேல், மோமோ சேலஞ்ச்' உள்ளிட்ட இணைய விளையாட்டுகளால் எழும் ஆபத்துகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், புதிய விளையாட்டு, 'ஆப்'பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


'புளுவேல், மோமோ சேலஞ்ச்' உள்ளிட்ட பல இணைய விளையாட்டுகளால், கடந்த சில ஆண்டுகளில், பலர் உயிரிழந்தது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்த ஆபத்துகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க, 'சைபர் டிரைவியா' என்ற, விளையாட்டு, 'ஆப்' எனப்படும் செயலியை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது.இதுகுறித்து, என்.சி.பி.சி.ஆர்., எனப்படும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சைபர் டிரைவியா எனப்படும், 'ஆப்'பில், பல விடைகளுடன் கூடிய கேள்வி தொகுப்புகள் இருக்கும். சரியான விடை கூறும் குழந்தைகளுக்கு, பரிசு புள்ளிகள் வழங்கப்படும். 


இணையத்தில் அறிமுகம் இல்லாத ஒருவர் தொடர்பு கொள்ளும்போது, அவர்களை எவ் வாறு எதிர்கொள்வது என்பது குறித்த கேள்விகள், சைபர் டிரைவியா, 'ஆப்'பில் இடம்பெற்றிருக்கும்.அறிமுகம் இல்லாத நபர், குழந்தைகளிடம், புகைப்படம் கேட்டாலோ, விரும்பத்தகாத செயல்களை செய்யும்படி கூறினாலோ, அவர்களை எதிர்கொள்வது குறித்த தகவல்கள், சைபர் டிரைவியா மூலம், குழந்தைகளுக்கு போதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.