'பில்' சமர்ப்பித்த நாளில் அரசு ஊழியர் சம்பளம் : முதன்மை செயலர்

'அரசு ஊழியர்களுக்கு நவம்பர் முதல் ஆன்லைனில் 'பில்' பெறப்பட்ட அன்று மாலையே சம்பளம் வழங்கப்படும்,'' என கருவூலத்துறை முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் பேசினார்.காரைக்குடி  மற்றும்  திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட திறனுாட்டல் மாநாடு நடந்தது. இதில் அவர் பேசியதாவது:


தமிழகத்தில் ஒன்பது லட்சம் அரசு ஊழியர், ஏழு லட்சம் ஓய்வூதியர் குடும்பத்தினருக்கு சம்பளம், ஒய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 824 கோடி ரூபாய் வரவாகவும், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 256 கோடி ரூபாய் செலவாகவும் அரசு நிதி கையாளப்பட்டுள்ளது. 

கருவூலப்பணிகளை மேம்படுத்தும் வகையில் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து புதிய திட்டம் நவம்பர் முதல் செயல்படுத்தப்படும். இதற்காக 288 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம் மூலம் ஊழியர்களின் 'பில்'களை தமிழ்நாடு, டில்லியில் உள்ள 29 ஆயிரம் சம்பள அலுவலர்கள், இணையதளம் மூலம் கருவூலத்தில் சமர்ப்பிக்கலாம். கருவூலத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை.ரிசர்வ் வங்கியின் 'இ குபேர்' வசதி மூலம் பட்டியல் சமர்ப்பித்த அன்றே பணம் வரவு வைக்கப்படும். ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால் ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்கப்படும்.

ஓய்வு நாளில் ஓய்வூதியம்தென்காசி ஜவஹர் கூறியதாவது:டில்லி திஹார் சிறையில் 30 ஆண்டுகளாக தமிழக போலீசார் 1,100 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களுக்கு கருவூலத்துறை சம்பளம் வழங்குகிறது. முதன்முறையாக தமிழக கருவூலத்துறையில்தான் 1972ல் கம்ப்யூட்டரை பயன்படுத்தி கணக்குகள் பராமரிக்கப்பட்டன. 2003ல் அரசு ஊழியர்களுக்கு இ.சி.எஸ்., முறையில் முதலில் சம்பளம் வழங்கியதும் தமிழகம்தான். கருவூலத்துறை காகிதம் இல்லாத அலுவலகமாக வரும் நவம்பர் முதல் கம்ப்யூட்டர் மயமாகிறது. இதனால் எந்த துறையில் எவ்வளவு நிதி செலவிடப்பட்டது, எவ்வளவு தேங்கியுள்ளது என எங்கிருந்தும் அறியலாம். அரசு ஊழியர்கள் விடுப்பு கோரி அலைபேசி மூலம் விண்ணப்பிக்கலாம். ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வூதியம் வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks