B.Ed., சேர்க்கை, நாளை கடைசி

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், நாளை முடிகிறது. அதன் பின் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, அங்கீகாரம் கிடைக்காது என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்து உள்ளது.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், 600க்கும் மேற்பட்ட, பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அமைப்பின் அங்கீகாரம் பெற்று, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பாடத் திட்டத்தை பின்பற்றி, கல்வியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க, கால அவகாசம் வழங்கப்படும். 

இந்த ஆண்டு, பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 8 வரை அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால், பல தனியார் கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக இருந்ததால், மாணவர்களை சேர்க்க கூடுதல் அவகாசம் கோரி, தனியார் கல்வியியல் கல்லுாரிகள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று, செப்., 8 வரை மாணவர் சேர்க்கையை நடத்த, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிகிறது.இது குறித்து, கல்வியியல் பல்கலை பதிவாளர், ரவீந்திரநாத், அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நாளைக்குப் பின், கல்லுாரியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, பல்கலையிலிருந்து மாணவர் சேர்க்கை அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்கப்படாது.அந்த மாணவர்கள் தேர்வு எழுதவும், சான்றிதழ் பெறவும் முடியாது. எனவே, கல்லுாரிகள் உரிய காலத்தில் சேர்க்கையை முடித்து, பல்கலையில் அனுமதியை பெற வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.