தமிழகத்தில் 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி துவக்கம்

திருநெல்வேலி: தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 412 மையங்களில் நேற்று முதல் பயிற்சிகள் துவங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று
நெல்லையில் இருந்து இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து உதவிகள் கேரளத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்விற்கான பயிற்சி 412 மையங்களில் இன்று (நேற்று) பயிற்சி தொடங்கிறது. விடுமுறை நாட்களில் காலை , மாலைகளில் பயிற்சியளிக்கப்படும். மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பயிற்சி வழங்கப்படும். இதற்காக 3,200 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் பள்ளிகளில் மையங்கள் தயார்படுத்தப்படும்.கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 24 பேர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் ஆயிரம் பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும், என்றார்.