குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனை

'குரூப் 4 தேர்வில், மாற்றுதிறனாளி தேர்வர்கள், தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பிப்., 11ல் நடத்தப்பட்ட, குரூப் 4 தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், ஆக., 30 முதல், செப்., 18 வரை, சான்றிதழ்களை, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மாற்றுத் திறனாளி தேர்வர்கள், மருத்துவ குழுவிடமிருந்து சான்றிதழ் பெற்று, பதிவேற்றம் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது, அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவ சான்றிதழ் பெற முடியவில்லை என, மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.எனவே, சான்றிதழ் பதிவேற்ற வேண்டிய மாற்று திறனாளிகள், சான்றிதழ் இல்லை எனில், மாற்று திறனாளிகளுக்கான, தேசிய அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும். 

அதனுடன், 'கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டால், உரிய மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கிறேன்' என்ற, உறுதிமொழி கடிதத்தையும் பதிவேற்ற வேண்டும்.அவ்வாறு பதிவேற்றாதோர், கவுன்சிலிங்கின் போது, மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இதுகுறித்து, சந்தேகம் இருப்பின், 044- - 2530 0336, 044- - 2530 0337 மற்றும், 1800 425 1002 ஆகிய, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.