ரோடு டூ ஸ்கூல்' திட்டத்தில், 102 அரசு பள்ளிகள் தத்தெடுப்பு!!

ஓசூர்: சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், 102 அரசு பள்ளிகளை
தத்தெடுத்த தனியார் நிறுவன நிர்வாகம், ஆசிரியர்களையும் நியமனம் செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில், அசோக் லேலண்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது.இந்நிறுவனம், 'ரோடு டூ ஸ்கூல்' என்ற திட்டத்தில், 2015 - 16, 2016 - 17ல், கல்வியில் மிகவும் பின்தங்கிய, 72 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தத்து எடுத்தது.


அத்துடன், 80 ஆசிரியர் - ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு, மாணவ - மாணவியரின் கல்வித்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதை விரிவுபடுத்தும் வகையில், நடப்பாண்டில் சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், 102 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, அசோக் லேலண்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளது.மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாத சம்பளத்தில் ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அரசு அனுமதியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், அந்நிறுவன அதிகாரி பாலசந்தர், நேற்று வழங்கினார்.தத்தெடுக்கப்பட்ட, 102 அரசு பள்ளிகளுக்கும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் செய்யப்பட உள்ளது.