10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு: CBSE

'சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடக்கும்; அடுத்த வாரம், தேர்வு தேதி வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஏப்ரலில் நடத்துவதற்கு பதில், மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். 


தற்போதைய நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 240 பாடங்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதில், திறன் மேம்பாடு தொடர்பான தொழிற்கல்வியில், 10ம் வகுப்பில், 15 பாடங்களும்; பிளஸ் 2வில், 40 பாடங்களும் நடத்தப்படுகின்றன. மேலும், டைப்போகிராபி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வெப் அப்ளிகேஷன், கிராபிக்ஸ் மற்றும் ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற பாடங்களில், மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் படிக்கின்றனர். இந்த பாடங்களுக்கும், தொழிற்கல்வி பாடங்களுக்கும், பிப்., மூன்றாம் வாரத்தில், தேர்வுகள் துவங்கும். மற்ற முக்கிய பாடங்களுக்கு, ஏப்ரலுக்கு பதில், மார்ச்சிலேயே தேர்வுகள் துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.