சித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 396 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 916 இடங்கள் உள்ளன.


இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை - அரும்பாக்கம், நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம், நாகர்கோவில் - கோட்டார் அரசு மருத்துவ கல்லுாரிகளில், இன்று துவங்குகிறது. செப்., 5, மாலை, 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5 மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.