தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


இணையதளம் : இதைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மாநில அளவிலான தேர்வு, நவம்பர், 4ல் நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.இந்த தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in, என்ற இணையதளம் வழியாக, ஆக., 23 முதல் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 50 ரூபாய். மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.


குற்றச்சாட்டு : நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், இந்த தேர்வு பற்றிய தகவல்களை, ஆசிரியர்கள் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தின் வாயிலாக, இதை தெரியப்படுத்தி, அனைத்து மாணவர்களும், திறனாய்வு தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.