அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., 'நீட்' புத்தகம்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் படி, 'நீட்' தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்தவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்திலும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

ஆனால், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, நீட் தேர்வுகள் நடத்தப்படுவதால், தமிழக பாடத்திட்ட மாணவர்களால், அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. எனவே, தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் நிறுவனங்களிடம் சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேரும் வகையில், தமிழக அரசு, இலவச நீட் பயிற்சி அளித்து வருகிறது.இந்த பயிற்சி, 2017 - 18ல் தாமதமாக துவங்கியதால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெற முடிந்தது.

இந்தாண்டு முன்கூட்டியே, நீட் பயிற்சியை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், முக்கிய நடவடிக்கையாக, தேசிய அளவில் பிரபலமான, 'பியர்சன்' நிறுவனத்துடன், தமிழக பள்ளி கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.இதன்படி, பிரபல எழுத்தாளர், டாக்டர் ராஜிவ் விஜய் எழுதிய, நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகத்தை, தமிழக அரசு வாங்கியுள்ளது. இந்த புத்தகம், 600 ரூபாய் மதிப்பிலானது. தமிழக மாணவர்களுக்கு இலவசமாக தரப்பட உள்ளது.இந்த புத்தகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத் திட்டத்தில், நீட் தொடர்பான கேள்வி - பதில்கள் மற்றும் உயிரியல் பாடத்தில், நீட் தேர்வுக்கான முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.