புதிய பாடங்கள் நடத்தியாச்சு : இன்னும் பயிற்சி இல்லை

மதுரை: 'காலாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையில், பிளஸ் 1 வணிக கணிதம் உட்பட சில புதிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை' என,ஆசிரியர் குற்றம்
சாட்டுகின்றனர்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது முதல், அத்துறையை மேம்படுத்தும் வகையில், பொதுத் தேர்வுகள், முடிவுகள் தேதியை முன்கூட்டியே அறிவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புதிய பாடத் திட்டம், 12 ஆண்டுக்கு பின் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு, ஜூனில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில், 'கியூ.ஆர்., கோடு' உட்பட சிறப்பு அம்சங்கள் பாடங்களில் புகுத்தப்பட்டன. இதுபோன்ற நவீன முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், பிளஸ் 1 வணிக கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்கப்படவில்லை. மே மாதம் பயிற்சி துவங்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். காலாண்டு தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ள நிலையில் மாதிரி வினா விடை கூட வழங்கப்படவில்லை.
ஆசிரியர்கள் கூறுகையில், 'ஜூனில் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. அன்று முதல் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒருமாதம் சென்ற பின், எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியை துவங்கினர். 'பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல் திட்டம் இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது' என்கின்றனர்.