அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வு தொடர்பான கற்பித்தல் பயிற்சி, சென்னையில், நாளை துவங்குகிறது.


இலவச பயிற்சி : பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் சிறப்பு பயிற்சி பெற்று விடுகின்றனர்.ஆனால், அரசு பள்ளி மாணவர்களால், லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, தனியாரிடம் பயிற்சி பெற முடியாது.எனவே, அரசு பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 முடித்த பின், மருத்துவ கல்வியில் சேர்வதற்கு, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம், 2017ல் துவக்கப்பட்டது.இந்த ஆண்டு, அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், முன்னதாகவே, நீட் பயிற்சியை துவங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.


மண்டல வாரியாக மையம் ; முதற்கட்டமாக, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள, சைதன்யா உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் வழியாக, தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, நீட் தேர்வு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை, சத்யபாமா பல்கலையில், நாளை துவங்கி வைக்கிறார்.முதற்கட்டமாக, 20 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது.பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு சென்று, மண்டல வாரியாக அமைக்கப்படும், நீட் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.