அரசு பள்ளிகளில் விரைவில் 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்'

'தமிழக அரசு பள்ளிகளில், விரைவில், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில், நேற்று அவர் அளித்த பேட்டி:



மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனை திறனைவெளிக் கொண்டு வரும் வகையிலும், வேலை வாய்ப்பு சவால்களை உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.பாடப் பகுதி தொடர்பான கருத்து, வீடியோக்கள், தீர்வுகள், கேள்வி, பதில்களை, 'கியூ.ஆர்., கோடு' மூலம் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு நாளில், இரண்டு லட்சம் பேர் வரை, பதிவிறக்கம் செய்ய முடியும்.பாடம் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய, இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த முறையை மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் செயல்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், முதல் முறையாக, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.ஆசிரியர்கள், கற்றல் வழி மட்டுமின்றி, வீடியோக்கள் மூலமாக பாடங்களை நடத்தலாம். இதற்காக, தமிழக பள்ளிகளில், விரைவில், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்கள்' அமைக்கப்பட உள்ளன.புதிய பாடநுால்களை படித்தால், போட்டி தேர்வில், சுலபமாக வெற்றி அடையலாம். 99 சதவீத கேள்விகள், அதில் இருந்து தான் கேட்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.