95 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்வு

தமிழகத்தில், 95 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஐந்து பள்ளிகளை தரம் உயர்த்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள, 95 பள்ளிகளையும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார். 



இதை பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.அரசாணைப்படி, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும். 

முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தலா, ஒரு முதுகலை ஆசிரியர் பணியிடம், புதிதாக ஏற்படுத்தப்படும்.இந்த பள்ளிகளில், கலை பாடப்பிரிவு துவங்கப்பட்டு, அதில், ஊரகப் பகுதிகளில் இருந்து, 15 மற்றும் நகர் பகுதிகளில் இருந்து, 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியலுக்கு, தலா, ஒரு முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு ஒப்புதல் தரப்படும். 

காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தலா, 1; அரியலுார், கடலுார், திண்டுக்கல், துாத்துக்குடி, தலா, 2 தரம் உயர்த்தப்படுகின்றன.திருச்சி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தலா, 3; தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, தலா, 4 ஆகியவை தரம் உயர்த்தப்படுகின்றன.

திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கோவை, தலா, 5; வேலுார், 6; சேலம், 7 என, 30 மாவட்டங்களில், மொத்தம், 95 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
95 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாக உயர்வு
தமிழகத்தில் செயல்படும், 95 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக, ஐந்து பெண்கள் உயர் நிலை பள்ளிகளும் அமைகின்றன.

திண்டுக்கல், அரியலுார், கரூர், நீலகிரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், தலா, 2; காஞ்சி புரம், நாகப்பட்டினம், திருவாரூர், வேலுார், விருதுநகர் மாவட்டங்களில், தலா, 3; ஈரோடு, தேனி, துாத்துக்குடி, பெரம்பலுார், கடலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒரு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், தலா, 4; தர்மபுரி மற்றும் மதுரையில், தலா, 5; சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில், தலா, 6 என, 31 மாவட்டங்களில், மொத்தம், 95 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பெரம்பலுார், பண்ருட்டி, திருப்பூர் - பெருமாநல்லுார், வேலுார் - திருமால்பூர் மற்றும் விழுப்புரம் - ஜீ ஆரியூர் என, ஐந்து இடங்களில், பெண்கள் உயர்நிலை பள்ளிகள் புதிதாக அமைகின்றன. தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்காக, 500 பட்டதாரி பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.