பேரிடர் காலங்களில், அவசர செய்திகளை, மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கு வசதியாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு, 14 லட்சம் ரூபாய் செலவில், www.tnsdma.tn.gov.in என்ற, இணையதளம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துவக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில், துவக்கி வைத்தார்.இந்த இணையதளத்தில், தமிழகத்தின் புவியியல் அமைப்பு, நிலவியல், நீர் நில புவியியல், வடிகால் அமைப்பு, மழையளவு மற்றும் தமிழக அரசின் பல்வேறு பேரிடர் மேலாண்மை திட்டங்கள் போன்றவை, இடம் பெற்று உள்ளன. வானிலை அறிக்கைகள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின், முக்கிய அலுவலர்களின் தொடர்பு எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மைக்காக, சென்னையில் உள்ள, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமையகங்களில், 1.93 கோடி ரூபாய் செலவில், கருத்தரங்க கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றையும், முதல்வர் பழனிசாமி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர்களின் திறனையும், தொழில்நுட்பத் திறனையும் மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமை, தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் தலைநகர், பாங்காக்கில் உள்ள, ஆசிய பேரிடர் ஆயத்த மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

'தமிழகத்தில், வரும், 22ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்' என, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களின், பக்ரீத் பண்டிகை, 22ல், கொண்டாடப்படும் என, அரசின் காலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை காஜி சலாஹூதீன் முகமது அய்யூப், நேற்று அறிக்கை வெளியிட்டார்.

அதில், 'தமிழகத்தில், 12ல், துல்ஹஜ் பிறை பார்க்கப்பட்டது. எனவே, பக்ரீத் பண்டிகை, 22ல், கொண்டாடப்படும்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், துல்ஹஜ் பிறை ஒரு நாள் தள்ளி தெரிந்ததால், 23ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என, புதுடில்லி ஜாமா மஸ்ஜித் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால், டில்லியில் மட்டும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு, 23ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.