கம்ப்யூட்டர்களுடன் 'போராட்டம்' : பழுதால் கதறும் ஆசிரியர்கள்

அரசுப்பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதர பழசான கம்ப்யூட்டர்களால் கற்பித்தல் பணி போராட்டமாக இருப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 


முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் பல அம்சங்கள் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக மேல்நிலை கல்வியில் கணினி பாடம் அனைத்து பாடப் பிரிவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் ஒரு கணினி ஆசிரியர் 50க்கும் மேற்பட்ட பாடவேளைகளை கையாள வேண்டியுள்ளது. 

அரசு பள்ளிகளுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள்தான் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 'அப்டேட் வெர்ஷனை' பயன்படுத்த முடியவில்லை. அடிக்கடி பழுதடைகின்றன. கம்ப்யூட்டர் பாடம் நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது:

ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்பதால் கம்ப்யூட்டர் ஆசிரியர், வாரத்தில் குறைந்தபட்சம் 40 பாடவேளை கையாள வேண்டியுள்ளது. கூடுதல் ஆசிரியர் நியமித்தால்தான் தரமான கற்பித்தல் சாத்தியமாகும். 2005-06ல் 1880 அரசு பள்ளிகளுக்கு தலா 9 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. 'அப்டேட்' இல்லாத அந்த கம்ப்யூட்டர்களையே ஆசிரியர் பயன்படுத்துகின்றனர். அடிக்கடி பழுதாவதால் கற்பித்தல் பணி சவாலாகிறது.

நவீன தரத்துடன் கணினி ஆய்வகம் ஏற்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்ற வேண்டும், என்றார்.