தீபாவளிக்கு ரயிலில் பயணம் : இன்று துவங்குது முன்பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோர், இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர்,
சென்னையில் உள்ளனர். இவர்கள், விசேஷ நாட்களுக்கு, சொந்த ஊர் செல்வர். பலர் முன்பதிவு செய்யாமல், கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்வதால், ரயில்களில் இட நெருக்கடியிலும், பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தியும், பயணம் செய்யும் நிலை உள்ளது. இந்நிலையை தவிர்க்க, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர், இன்று முன்பதிவு செய்தால், ரயிலில் சிரமமின்றி பயணம் செய்யலாம். தீபாவளி பண்டிகை, வரும், நவ., 6, செவ்வாய்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதன்படி, நவ., 2 வெள்ளி என்பதால், அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்களாக வருகிறது. 5ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து, பலரும் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு உள்ளது. ரயில்களில், 120 நாட்கள் வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.இதன்படி, நவ., 2, ரயிலில் பயணம் செய்ய, இன்றும், நவ., 3ல் பயணம் செய்ய, நாளையும் முன்பதிவு செய்ய வேண்டும். நவ., 4, 5ம் தேதிகளில் செல்ல, முறையே, வரும், 7, 8ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தினால், தீபாவளிக்கு நெருக்கடியில் சிக்காமல், சொந்த ஊருக்கு நிம்மதியாக பயணிக்கலாம்.