பள்ளி கல்வித்துறை நிர்வாக சீர்திருத்தப்படி அதிகாரம் என்ன? : கல்வி அதிகாரிகளுக்கு 9ம் தேதி பயிற்சி

பள்ளி கல்வித்துறையின் நிர்வாக சீர்திருத்தம் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, 9ம் தேதி முதல், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. 


52 மாவட்டங்கள் : மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் போன்ற பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உதவி தொடக்க கல்வி அதிகாரி பதவியும், வட்டார கல்வி அதிகாரி என, மாற்றப்பட்டுள்ளது.அத்துடன், ஏற்கனவே இருந்த, 67 கல்வி மாவட்டங்களுடன், புதிதாக, 52 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 


இதுவரை, ஒவ்வொரு இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் இருந்த நிலையில், தற்போது ஒரே அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிக்கும், தங்கள் எல்லையில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் நிர்வாகத்தையும், கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை : இந்நிலையில், நிர்வாக சீர்திருத்தப்படி, கல்வி அதிகாரிகளுக்கான பணிகள் என்ன; பொறுப்புகள் என்ன; அவர்களின் அதிகாரங்கள் என்ன என்று தெரியாமல், மாவட்ட கல்வி அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர். அதை போக்கும் வகையில், நிர்வாக ரீதியான சிறப்பு பயிற்சிக்கு, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 


இந்த பயிற்சி, 9ம் தேதி முதல், நான்கு நாட்கள் நடக்கிறது. 9ல், சென்னை; 10ல், திருச்சி; 11ல், திருவண்ணாமலை மற்றும், 12ம் தேதி கோவையில் பயிற்சி நடக்கிறது. இதில், இணை இயக்குனர்கள், நாகராஜ முருகன், ராதாகிருஷ்ணன், சுகன்யா மற்றும் வாசு ஆகியோர் பங்கேற்று, பயிற்சி அளிக்கின்றனர்.சென்னையில் நடக்கும் பயிற்சியின் துவக்க நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.