குமரி மாவட்டம், தக்கலை ஆசிரியர் மீது தாக்குதல் : 8 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்: பாலியல் புகார் கூறி, அரசு பள்ளி ஆசிரியரை தாக்கியோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டம், தக்கலை அருகே, திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர், செல்லம், 55. பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, இவரை, அப்பகுதி மக்கள் தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர்.


ஆசிரியர் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'செல்லம் மீது பாலியல் புகார் சுமத்தியதில் சதி உள்ளது, வழக்கை வாபஸ் பெற வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியரின் மனைவி, ஏஞ்சலா, 52, தக்கலை போலீசில் அளித்த புகார்:எனது கணவர், 22 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். சிலர் அத்துமீறி பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து, பொருட்கள் மற்றும் ஆவணங்களை சேதப்படுத்தினர்.இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்ததால், அந்த கும்பல், பள்ளிக்குள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அந்த பகுதியை சேர்ந்த எட்டு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.