மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவத்தில், 70 சதவீத இடம் கிடைக்க வாய்ப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

''மாநில பாடத்திட்டத்தில் படித்த, 70 சதவீத மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.


தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலில், 44 ஆயிரத்து, 332 பேர் தகுதி பெற்றனர். மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம் துவங்கியது.


முதல் நாள், சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், 38 எம்.பி.பி.எஸ்., - இரண்டு பி.டி.எஸ்., என, 40 இடங்கள் நிரம்பின. இரண்டாம் நாள், பொதுப்பிரிவினருக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், 609 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 580 பேர் வந்திருந்தனர். அவர்களில், 573 பேருக்கு, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்கள், சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தனர். அவர்களில், மூன்று பேர், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். அவர் களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இட ஒதுக்கீடு ஆணையை வழங்கினர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:நாட்டில், சுகாதாரத்துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள், வருங்காலங்களில், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் சேவையாற்ற முன்வர வேண்டும். நடப்பாண்டில், மாநில பாடத்திட்டத்தில் படித்த, 70 சதவீத மாணவர்களுக்கும், மத்திய பாடத்திட்டத்தில் படித்த, 30 சதவீத மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


இருப்பிட சான்றிதழ் விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 90 பேர் தரவரிசை பட்டியலில், புதியதாக இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 29 பேருக்கு இடங் கள் கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சி.எம்.சி., கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் : வேலுார் சி.எம்.சி., மருத்துவ கல்லுாரி, முதன் முறையாக, நடப்பாண்டில், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 84 இடங்களை ஒப்படைத்துள்ளது. அந்த இடங்களை, சிறுபான்மையின கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரி இடம் பெறவில்லை. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, கவுன்சிலிங் நடைபெறும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கவுன்சிலிங்கில் முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்களில் சிலர், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரி இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். அந்த கல்லுாரியில் இடம் கிடைக்கும் பட்சத்தில், தற்போது பெற்ற இடங்களை கைவிடுவோம் என, தெரிவித்துள்ளனர்.