அதிக கல்வி கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை CBSE பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சென்னை, பெருங்களத்துார் மற்றும் குரோம்பேட்டையில் உள்ள, ஸ்ரீமதி
சுந்தரவல்லி நினைவு, சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஒவ்வொரு மாணவரிடமும், இரண்டு லட்சம் ரூபாய் காப்பு தொகை கேட்ட விவகாரம், மாணவர்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்தும், பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார்.

இதன்படி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், இணை இயக்குனர், நரேஷ் ஆகியோர், பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி இயக்குனர், கண்ணப்பன், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதன் விபரம்:சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகள் சில, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், அறக்கட்டளை மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதிவுடன், சேவை அடிப்படையில் நடத்துவதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழக தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 1973ன் படி, சமூக பொறுப்புணர்வுடன், பள்ளிகள் இயங்க வேண்டும்.பள்ளிகளை வணிக மயமாக்குவது, அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளிகளின், விதிமீறும் செயலாகும். கட்டண ஒழுங்குமுறை கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே, பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.


சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், விதியை பின்பற்ற வேண்டும். பள்ளிகள் வழங்கும் வசதிகள் குறித்து, கட்டண கமிட்டியிடம், ஆவணங்கள் தாக்கல் செய்யும் நிலையில், அதற்கு தேவையான கட்டணத்தை, கமிட்டி நிர்ணயிக்கிறது. இந்த கட்டணத்தை விட அதிகம் வசூலிப்பது, விதியை மீறிய செயல். அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கான, இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு, சி.பி.எஸ்.இ.,க்கு, தமிழக அரசு பரிந்துரை செய்யும்.மேலும், 2016 ஜன., 28ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தங்கள் கல்வி கட்டணத்தை, கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும். அவற்றை கமிட்டி ஆய்வு செய்து, விதிமீறலை கண்டுபிடித்தால், பள்ளியின், சி.பி.எஸ்.இ., இணைப்பை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கும்.



அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிகள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுத்து, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கலாம். மேலும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்க முடியும்.எந்த பள்ளியும், கல்வி கட்டணம் தவிர, நன்கொடை, பங்களிப்பு தொகை உட்பட, எந்த கட்டணமும் வசூலிக்க முடியாது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படியும், அதிக கல்வி கட்டணம் வசூலிப்பது குற்றமாகும். சி.பி.எஸ்.இ., வாரியத்தின் விதிகளிலும், பள்ளிகள் அளிக்கும் வசதிக்கு ஏற்ப மட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும்.எனவே, சி.பி.எஸ்.இ., தவிர, அனைத்து தனியார் பள்ளிகளும், கல்வி கட்டண கமிட்டியிடம், ஆவணங்கள் சமர்ப்பிக்காவிட்டால், ஆக., 15க்கு முன் தாக்கல் செய்து, கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். 


சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தங்களின் கல்வி கட்டண விபரத்தை, ஆக., 15க்குள், கல்வி கட்டண கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும்.அதை, சி.பி.எஸ்.இ., விதிகளின் படி, கமிட்டி ஆய்வு செய்யும். இதில் விதிமீறல் தெரிந்தால், அவற்றின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்ய, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்துக்கு, தமிழக அரசு பரிந்துரைக்கும். இது குறித்து, பெற்றோரிடம் இருந்து புகார் வந்தால், முதன்மை கல்வி அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்வர்.இவ்வாறு அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.