'வாட்ஸ்ஆப்பில்' இணைந்த இளைஞர்கள்; 5 பள்ளிக்கு விதை பென்சில் வினியோகம்

சிவகங்கை அருகே 'வாட்ஸ்ஆப்பில்' இணைந்த இளைஞர்கள், பசுமையை ஏற்படுத்த 5 கிராமப் பள்ளிகளுக்கு விதை பென்சில்களை வினியோகித்தனர்.
திருமலையைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டாக்டர் அப்துல் கலாம் நற்பணி மன்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் 'வாட்ஸ்ஆப்' மூலம் இணைந்து கிராமங்களில் பசுமையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். 



முதற்கட்டமாக திருமலை, வீரப்பட்டி, சேதுநகர், கள்ளராதினிப்பட்டி, வலையராதினிப்பட்டி ஆகிய 5 பள்ளி மாணவர்களுக்கு 500 விதை பென்சில்களை வழங்கினர். பென்சிலின் மேற்பகுதியில் முள்ளங்கி, கீரை, மிளகாய், கத்தரிக்காய், வெண்டை விதைகள் மற்றும் வேம்பு, புங்கை போன்ற மரங்களின் விதைகள் வைக்கப்பட்டு காகிதத்தால் மூடப்பட்டுள்ளன. திருமலை அய்யனார் கூறியதாவது: பசுமை குறைந்ததால் மழை பொழிவு குறைந்தது. இதனால் கிராமங்களில் பசுமையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். மாணவர்களிடம் விதையை மட்டும் கொடுத்த பயன்படுத்த மாட்டர். இதனால் அவர்களுக்கு விதை பென்சில் வழங்கியுள்ளோம். மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் பென்சிலில் உள்ள விதைகளை துாவும்போதும் செடிகள் வளரும். வீடு, பள்ளிகளிலும் தோட்டங்களை உருவாக்கலாம். தொடர்ந்து மழைக்காலங்களில் விதை பேனாவும் வழங்க உள்ளோம். வெற்றி அடைந்தால் மற்ற இடங்களுக்கும் வழங்குவோம், என்றார்.