வருமானவரி கணக்கு தயாரிப்பு உதவி மையம் திறப்பு கணக்கு தாக்கலுக்கு 31-ந்தேதி கடைசி நாள்

வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையம் நேற்று திறக்கப்பட்டது.

இந்த மையம் தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படுகிறது. முதல் நாளான நேற்று அதிகம் பேர் சென்று வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்தனர். இதற்காக வருமானவரி கணக்கு தயாரித்து தரும் பணியில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாளாக வருமானவரித்துறை அறிவித்து உள்ளது. மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

வருமானவரி கணக்கை 31-ந்தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31-ந்தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந்தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந்தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.