அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம், ரூ.1,000 பரிசு

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயம், 1,000 ரூபாய் பரிசாக தரப்படும்' என அறிவித்து இருந்த கிராமத்தினர், பெரிய விழா நடத்தி, 28 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.


தஞ்சாவூர், பேராவூரணி அருகே உள்ளது, துலுக்க விடுதி கிராமம். இங்கு, 1998 முதல், துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், கிராம மக்களே செய்து வந்தனர். 2003ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, கல்வித் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். 83 மாணவர்கள் மட்டுமே இருந்ததால், '120க்கு மேல் மாணவர்கள் இருந்தால் மட்டுமே, தரம் உயர்த்த முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளியை தரம் உயர்த்த நினைத்த கிராம மக்கள், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டனர். இதன்படி, 'பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயமும், 1,000 ரூபாய் பரிசுமும் வழங்கப்படும்' என, அறிவித்தனர். இதனால், நடப்பு கல்வியாண்டில், 28 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். அறிவித்தபடி, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா, நேற்று முன்தினம் பள்ளியில் நடந்தது. 

பேராவூரணி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராசு, மணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயம் மற்றும், 1,000 ரூபாய் பரிசு வழங்கினார். தற்போது, 96 மாணவர்கள் உள்ளனர். எனவே, பள்ளியை தரம் உயர்த்தும் கோரிக்கையை, மீண்டும் எழுப்ப, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.