IIT - JEE நுழைவுத்தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

தேசிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் உள்ள, 12 ஆயிரம் இன்ஜினியரிங் இடங்களுக்கான, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.


மத்திய அரசின் கட்டுப்பாட்டில், 23 ஐ.ஐ.டி., நிறுவனங்கள் மற்றும், உயர் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, 31 என்.ஐ.டி., மற்றும், 31 ஐ.ஐ.ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.இவற்றில், 25 ஆயிரம் இடங்களுக்கு மேல், இன்ஜினியரிங் இளநிலை படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இதற்கான, ஜே.இ.இ., பிரதான தேர்வு, ஏப்ரலில் நடத்தப்பட்டு, மே மாதம் முடிவுகள் வெளியாகின. இதில், தேர்ச்சி பெற்றவர்களில், 2.24 லட்சம் பேர், ஐ.ஐ.டி.,க்களுக்காக மட்டும் நடத்தப்படும், இரண்டாம் கட்ட, ஜே.இ.இ., 'அட்வான்ஸ்ட்' தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர்.


இந்த தேர்வின் முடிவுகள், இன்று பிற்பகல் வெளியாகின்றன. இந்த ஆண்டு தேர்வை நடத்தும், கான்பூர் ஐ.ஐ.டி., இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தரவரிசை அடிப்படையில், 23 ஐ.ஐ.டி.,க்களில் உள்ள, 12 ஆயிரம் இன்ஜினியரிங் இடங்களில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' வாயிலாக சேர்க்கப்படுவர்.