அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நிறைவு

அண்ணா பல்கலை ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நாளையுடன் முடிகிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், மாணவர்களைச் சேர்க்க, ஆன்லைன் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 2ல் முடிந்தது; 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துஉள்ளனர். 


இதையடுத்து, கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்த வர்களுக்கு, ஜூன், 8ல், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்களுக்கு, மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள, உதவி மையத்தில், நேற்றுடன் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது. மற்ற, 40 மையங்களில், நாளையுடன் சான்றிதழ் சரிபார்ப்பு முடிகிறது.சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, உதவி மையத்தில் மட்டும், வரும், 17ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. மற்ற மாவட்டங்களில், குறிப்பிட்ட நேரத்துக்கு வர முடியாதவர்கள், 17ம் தேதி, சென்னை உதவி மையத்திற்கு வந்து, தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்கலாம் என, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.