பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

பள்ளிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது


.உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுகிறது. பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம்.
 பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது.
 இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ஆர்.எம்.எஸ்.(அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், திட்ட அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
 அதில், ‘தமிழக முதல்வரின் உத்தரவுப்படி பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசியெறிப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
 முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்என்றும் தெரிவித்துள்ளார்.