அண்ணா பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா

சென்னை: அண்ணா பல்கலையின், 38வது பட்டமளிப்பு விழா, இன்று சென்னையில் நடக்கிறது. இதில், 1.94 லட்சம் பேர் பட்டம் பெறுகின்றனர். அண்ணா பல்கலை, அதன் உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகள் என,
மொத்தம், 550 கல்லுாரிகள், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. இவற்றில், இறுதி ஆண்டு படித்து முடித்த மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது. இதன்படி, 38வது பட்டமளிப்பு விழா, இன்று சென்னையில், அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கிறது. பல்கலையின் வேந்தர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்; இந்திய அறிவியல் உயர்கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர், பலராம்; பல்கலையின் துணைவேந்தர் சுரப்பா, உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர், விழாவில் பங்கேற்கின்றனர்.பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்த, 1,304 பேரும், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரி களில், இறுதியாண்டு தேர்வில், முதல் தரவரிசை பெற்ற, 64 பேரும், நேரில் பட்ட சான்றிதழ் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு, அந்தந்த கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா நடத்தி, சான்றிதழ் தரப்பட உள்ளது. இந்த வகையில், 1.94 லட்சம் பேருக்கு, இந்தபட்டமளிப்பு விழா வாயிலாக, பட்டம் வழங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.