அரசு பெண் ஊழியருக்கு இரண்டாம் பிரசவத்துக்கும் விடுமுறை அனுமதி அரசாணை வெளியீடு

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 180 நாட்களாக இருந்தது. இதை 270 நாட்களாக உயர்த்தியும், அந்த விடுப்பு காலத்தை பெண் ஊழியர்களே பிரசவத்துக்கு முன்னாலும், பின்னாலும் பிரித்து எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்வதற்கான அரசாணை கடந்த 7.11.16 அன்று வெளியிடப்பட்டது. (இரண்டு குழந்தைகள்வரை பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசு விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம்).

ஆனால் முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரசு பெண் ஊழியர்களுக்கு, இரண்டாம் பிரசவத்திற்காக அரசு விடுமுறை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற பிரச்சினைகள் கோர்ட்டுகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டாம் பிரசவத்துக்கு அரசு விடுப்பு கேட்டு, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தையை பெற்ற அரசு பெண் ஊழியர்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்தப் பிரச்சினையை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது. அதன்படி, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரசு பெண் ஊழியர்களுக்கும், இரண்டாம் பிரசவத்துக்கு மகப்பேறு விடுமுறையை அரசு அளிக்கலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.