ஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் சோகம்

ஒரே ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கியிருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு சீருடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், செருப்பு, நான்கு செட் சீருடை, கலர் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக் உட்பட, 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஒன்பதில் இருந்து பிளஸ் 2 வரை சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய சீருடை என்பதால், துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரே அளவுள்ள சீருடை வழங்கப்பட்டு உள்ளது. மூன்று, நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் இறுக்கமாகவும், முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதாகவும் உள்ளது. அளவுக்கு ஏற்ப சீருடை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். ஒரே ஒரு செட் மட்டும் வழங்கியிருப்பதால், கடந்தாண்டு சீருடையையும் அணிந்து வர, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
காரமடை வட்டார கல்வி அலுவலர் தேசிங் கூறியதாவது:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 98 துவக்கப்பள்ளிகள், 26 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 9,793 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் நான்கு செட் இலவச சீருடை வழங்க வேண்டும். இந்தாண்டு சீருடை மாற்றம் செய்ததால், ஒரு செட் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு வரை ஒரு அளவிலும், நான்கு, ஐந்து வகுப்புகளுக்கு ஒரு அளவிலும் சீருடைகள் தைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு ஏற்ப, 'சைஸ்' மாற்றம் செய்து கொடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பேக், செருப்பு, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்கள் வந்தவுடன் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.