மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையான ஆவணங்கள்

மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. அதற்கு, எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணம் குறித்த விபரங்களை, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மொத்தம், 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தர வரிசையில், 44 ஆயிரத்து, 332 பேர் இடம் பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்போர், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம்:
* நீட் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
* கடைசியாக படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் நிறுவனத்தின், 'போனோபைடு' சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்
* இருப்பிட; ஜாதி சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பெற்றோருக்கும், மாணவருக்குமான உறவை குறிப்பிடும் ஆவணம் மற்றும் தேவைப்படுவோருக்கு, முதல் பட்டதாரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்
* தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலங்களில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்
* மாணவரின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான, ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் கட்டாயம் எடுத்து வர வேண்டும். அசல் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு, திரும்ப கொடுக்கப்படும்; நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி இல்லை.போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்க, விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பெற்றோருக்கும், மாணவருக்குமான உறவை குறிப்பிட, தங்களிடம் உள்ள ரேஷன் கார்டு போன்ற, ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.