'நீட்' தேர்வு பயிற்சிக்கு புதிய நிறுவனம் தேர்வு?

'நீட்' நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு, புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி மேல்நிலை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற, அரசின் சார்பில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்காக, சென்னையை சேர்ந்த, 'ஸ்பீட் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பயிற்சி திட்டத்துக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்படி, 72 மையங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நீட் பயிற்சி தரப்பட்டது. 



அதேபோல், பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், சென்னையில், ஐந்து இடங்களில், தங்கும் வசதியுடன், ஒரு மாத சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த, நீட் தேர்வில், அரசின் சிறப்பு பயிற்சி பெற்ற, 4,000 பேரில், ஏழு பேர் மட்டுமே, 306 முதல், 392 வரையில், மதிப்பெண் பெற்றுள்ளனர். 37 பேர், 200 முதல், 295 வரை மட்டுமே மதிப்பெண் பெற்றுள்ளனர். 


மொத்தம், 20 கோடி ரூபாய் செலவு செய்தும், மிக குறைந்த எண்ணிக்கை மாணவர்களே, மருத்துவ படிப்பு வாய்ப்பை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், வரும் ஆண்டில், ஸ்பீட் நிறுவனத்துக்கு பதிலாக, நீட் பயிற்சியில் நல்ல அனுபவம் உள்ள நிறுவனத்தை தேர்வு செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஐதராபாத், பெங்களூரு, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில், பிரபலமாக உள்ள, நீட் பயிற்சி நிறுவனங்களிடம் பேசி, அவற்றில் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யவும், பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான, 'டெண்டர்' விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.