ஆசிரியர் தகுதி தேர்வு தமிழிலும் நடக்கும் : சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் முற்றுப்புள்ளி

தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும், ஏற்கனவே இருந்ததுபோல, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்' என, மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது. மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு, இதுவரை, தமிழ் உட்பட, 20 மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்த ஆசிரியர் தகுதி தேர்வை, நான்கு மாதங்களில் நடத்த வேண்டுமென, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இதையடுத்து, இந்த தேர்வை நடத்தும், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஹிந்தி உட்பட, மூன்று மொழிகளில் மட்டும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மாராத்தி உட்பட, 17 மொழிகளிலும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறை, இந்த மொழிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, மூன்று மொழிகளில் மட்டும் தேர்வு நடத்தப்படுவதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறியதாவது: இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவால். தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், உரிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், கடுமையான நெருக்கடிக்கு ஆளாவர். ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இது, மொழிப்போராட்டத்தை தீவிரப்படுத்தவே, வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து, நேற்று டில்லியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:டில்லி உயர் நீதிமன்ற், நான்கு மாதங்களுக்குள் தேர்வை நடத்த உத்தரவிட்டதன் காரணமாகவே, மூன்று மொழிகளில் தேர்வு நடத்துவது என, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. இருப்பினும், மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ் உட்பட, 20 மொழிகளிலும் நடத்தப்படும். இது குறித்து, உரிய உத்தரவு, சி.பி.எஸ்.இ.,க்கு பிறப்பிக்கப்பட்டு விட்டது. இந்த விஷயத்தில், தேவையற்ற எந்த குழப்பங்களும் வேண்டாம். தற்போது, 20 மொழிகளிலும், தேர்வுகளை நடத்த வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் என்றால், வேறு பேச்சுக்கே இடமில்லை. நிச்சயம், 20 மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -