அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்க்க நேரம் தவறியவர்களுக்கு, சலுகை

இன்ஜினியரிங் கவுன்சிலிங், சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம் தவறியவர்களுக்கு, சலுகை அளித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான, ஆன்லைன்
கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த கவுன்சிலிங்குக்கு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, இம்மாதம், 8ம் தேதி துவங்கியது. 42 உதவி மையங்களில் நேரம் ஒதுக்கி, விண்ணப்பதாரர்கள், சான்றிதழ்களுடன் வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.


இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாதவர்களுக்கு, புதிய சலுகை அளித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வர முடியாதவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கான கடைசி நாளான, ஜூன், 14க்கு முன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்திற்கு, எந்த நேரத்திலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரலாம்.அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு முறை தான் அனுமதிக்கப்படுவர். 


எனவே, வரும்போது, விண்ணப்ப படிவத்தை பிரதி எடுத்து, அதில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி வர வேண்டும். விண்ணப்பத்தின், மூன்றாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களின், நகல்களையும் எடுத்து வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.