'ஜூலை முதல் 'நீட்' பயிற்சி' ; பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

''நடப்பு கல்வி ஆண்டுக்கு, ஜூலை முதல், 'நீட்' பயிற்சி துவக்கப்படும்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில், நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: கடந்தாண்டு, அரசு வழங்கிய, நீட் தேர்வு பயிற்சியில், ௧,402 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவ கல்வி, 'கட் ஆப்' மார்க், நாளை வெளியிடப்படுகிறது. 


இதன் பிறகே, இம்மாணவர்களில் எத்தனை பேர், மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர், என்பது தெரியும். அரசின் பயிற்சியால், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், மருத்துவ கல்லுாரி செல்லும் மாணவர்களுக்கும், விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும் ஜூலை முதல், நீட் தேர்வு பயிற்சி துவக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும், எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள, 412 மையங்களிலும், நீட் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி : திருப்பூரில் அமைச்சர் செங் கோட்டையன் பேசியதாவது: புதிய பாடத்திட்டத்தை நடத்துவதற்கு, ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் பயிற்சியளிக்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் லேப்-டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கல்வித்தரத்தை மேம்படுத்த, 'ரோபோ கிளாஸ்' வகுப்பறையை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கல்வித்தரத்தை, தேசிய அளவில் உயர்த்தும் நோக்கத்தில் தான் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன, என்றார்.